தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சி தலைவர்கள் குறித்து நாகரிகமற்ற முறையில் பேசி வருகின்றனர். அந்த வகையில் நேற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசியது சர்ச்சையானது. அப்போது “ திமுக காலத்தில் வெள்ளம் வந்ததா? வறட்சி வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்றும் வரவில்லை.. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே கொரோனாவில் காணாமல் போயிருப்பார்.. இவரே அந்த கொரோனாவிலேயே போயிருப்பார்..
உண்மை பேசினால் ஸ்டாலின் பதறுகிறார்.. அதனால் தான் பச்சைப்பொய் பழனிசாமி என்று கூறுகிறார்.. குழந்தைகள், மூதாட்டிகளை கூட விட்டு வைக்காத கேவலமான ஆட்சி தான் திமுக தான்.. திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அமோகமாக இருக்கிறது. அதை கட்டுப்பட்டுத்த தவறிய அரசாங்கம் தான் ஸ்டாலின் அரசு.. அதை எல்லாம் கட்டுப்படுத்த துப்பில்லாத ஒரு முதலமைச்சர் என்னைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை உண்டா..?
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பாரு என்று இபிஎஸ் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் “ மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறீர்கள்.. மக்கள் தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கிறீர்கள்.. இன்றைக்கு தேர்தல் பயத்தில் எந்தளவுக்கு அநாகரிகமாக பேச தயாராகிவிட்டீர்கள் என்று நினைத்தால் உங்களுக்காக நான் அவமானப்படுகிறேன்.. கோவிட் நேரத்தில் முதலமைச்சர் இல்லாமல் போயிருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.. இது ஒரு தேர்தல் தானே.?
இவ்வளவு கீழ்தரமாக இறங்கி பேச முடியும்..? ஒரு தேர்தலுக்காக தமிழ்நாட்டின் முதலமைச்சரை திமுக தலைவரை, இன்னொரு மனிதனை பார்த்து கொரோனாவில் இல்லாமல் போயிருப்பார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கேவலமாக இறங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறியக் கூடிய நாள் நெருங்கி விட்டது.. எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள்..” என்று தெரிவித்தார்..
