கடந்த 2023-ஆம் ஆண்டு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்கும் வகையில், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதே ஆண்டில் மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் படி, தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என குறிப்பிடப்பட்டது. இந்த மாற்றத்தின் மூலம் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம்ல் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி சூர்யகாந்த், “இந்த வழக்கை நான் தொடர்ந்து விசாரிப்பது சரியானதா? இதில் தீர்ப்பு வழங்கும் சூழலில், என்னுடைய நிலைப்பாட்டில் சுயநலன் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டக்கூடும்,” என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “அத்தகைய குற்றச்சாட்டுகள் எழாது. இருப்பினும், இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வது நல்ல தீர்மானமாக இருக்கும்,” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி சூர்யகாந்த், “இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதியாக இல்லாத நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும்,” என்று தெரிவித்தார்.
