தொகுதி பங்கீட்டில் இழுபறி: அதிமுக சாதகமான தொகுதிகளை கேட்கும் பாஜக, கோவில் நகர தொகுதிகள் மீது குறி – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதனால் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் சில கட்சிகள் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு விட்டது. 

ஆனால் அதிமுக கூட்டணியில் இதுவரை எந்த கட்சிக்கும் எத்தனை தொகுதி என்பது கூட முடிவாகவில்லை. என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சியான பாஜக அதிமுகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளை குறி வைத்து உள்ளது. மயிலாப்பூர், திநகர், வேளச்சேரி, சிங்கநல்லூர், தென்காசி என பல தொகுதிகளை பாஜக தங்களது விருப்ப பட்டியலில் கொடுத்துள்ளன. 

அதுமட்டுமின்றி, ‘திருத்தணி, திருவண்ணாமலை, அவினாசி, பழனி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, திருசெந்தூர் உள்ளிட்ட கோவில் நகரங்களில் உள்ள  தொகுதிகளை, கட்டாயம் தங்களுக்கு அ.தி.மு.க., தர வேண்டும்’ என, பா.ஜ., தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. 

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. இதை எதிர்த்து பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளுட தீவிரமாகப் போராடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், பிரதமர் மோடி வழிபாடு செய்தார். இதனால் இத்தொகுதியை பா.ஜ., கேட்கிறது.

மத்திய இணை அமைச்சர் முருகன், அவினாசி தொகுதியில் போட்டியிட விரும்புகிறா அவினாசி கோவில் பிரச்னைக்காக, ஹிந்து முன்னணி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அத்தொகுதியை பா.ஜ., குறி வைத்துள்ளது.

 

இப்படி கோவில் நகர தொகுதிகளில் பாஜக பல்வேறு போராட்டங்களை முன் எடுத்து வருகிறது. இதனால் இத்தொகுதிகளில் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து எளிதாக வெற்றி பெற முடியும் என பாஜக கணக்கு போடுகிறது. ஆனால் பாஜக கேட்கும் தொகுதிகளில் சிலவற்றை மட்டும் அதிமுக ஒதுக்க சம்மதம் தெரிவிப்பதால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Source link