தோசை சாப்பிட்ட பிறகு 2 குழந்தைகள் உயிரிழப்பு; பெற்றோர் கவலைக்கிடம்..! குஜராத்தில் சோகம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

குஜராத்தின் அகமதாபாத் நகரில், தோசை சாப்பிட்ட பிறகு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் பெற்றோர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 1-ஆம் தேதி நிகழ்ந்தது. உயிரிழந்த அந்த இரண்டு சிறுமிகளின் தாத்தாவான கௌரிசங்கர் பிரஜாபதி இதுகுறித்து பேசிய போது “ தோசை செய்வதற்காக எனது மகன் விமல், அருகிலுள்ள ‘கனஷியாம் டைரி’ (Ghanashyam Dairy) என்ற கடையில் இருந்து அந்த மாவை வாங்கினார். மறுநாள் காலையில், விமல், அவரது மனைவி பாவனா மற்றும் அவர்களின் இரண்டு மகள்களுக்கும் வாந்தி ஏற்பட்டது; அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏப்ரல் 3-ஆம் தேதி, அவர்களின் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்தது. ஏப்ரல் 5-ஆம் தேதி, அவர்களின் நான்கு வயது மகளும் அதே துயரமான முடிவைச் சந்தித்தார். விமலும் பாவனாவும் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்று தெரிவித்தார்..

இந்தச் சம்பவம் அதிகாரிகளைத் துரித நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், உள்ளூர் காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் ‘கனஷியாம் டைரி’ கடையில் இருந்து உணவு மாதிரிகளைச் சேகரித்து, பரிசோதனைக்காக உணவுப் பாதுகாப்பு ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; உடற்கூராய்வு அறிக்கை வெளியான பின்னர் தான் இறப்புக்கான காரணம் தெரியவரும்..

கடை உரிமையாளர் விளக்கம்

அந்த டைரி கடையின் உரிமையாளரான கனஷியாம் ஷா பேசிய போது, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தன்னிடம் மாவை வாங்கிச் செல்கின்றனர் என்றும், ஆனால் இதுவரை யாரும் அதுகுறித்து எந்தப் புகாரும் அளித்ததில்லை என்றும் தெரிவித்தார். ஏப்ரல் 1-ஆம் தேதி மட்டும் தான் சுமார் 100 கிலோ மாவை விற்பனை செய்ததாகவும், ஆனால் அதை வாங்கிச் சென்ற வேறு யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எனினும் விமல் மூன்று கிலோ மாவை வாங்கியிருந்ததாகவும், ஆனால் தோசை தயாரிப்பதற்கு அதில் வெறும் 300 கிராம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link