பழனி,
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று பழனிக்கு வந்தார். அப்போது அவர் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலுக்கு சென்று தனது வேட்புமனுவை முருகப்பெருமான் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட்ட அவர், சிறிது நேரம் தியானம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புதுச்சேரியில் என். ரங்கசாமி தலைமையில் பா.ஜனதா, அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தெளிவு உள்ளது. எனவே மாற்றத்தை கொண்டு வர தீவிரமாக வேலை செய்து வருகிறோம். த.வெ.க. ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் விஜய்யுடன் இருக்கும் அந்த குழு சரியான வழியில் நடத்தப்படாமல் உள்ளது. தி.மு.க. உளவாளிகள் த.வெ.க.வில் ஊடுருவி இருப்பதால், அவர்கள் கூட்டணிக்கு செல்ல விடமாட்டார்கள்.அவர்களின் அஜண்டா என்னவென்றால், த.வெ.க.வை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதுதான். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
