நான் யாரிடமும் சீட் கேட்கவில்லை.. என்னுடைய வேலை.. அண்ணாமலை ஓபன் டாக் – i did not ask seat to contest assembly election 2026 said bjp annamalai

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் சட்டமன்ற தேர்தலில், கோவையில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இது சம்பந்தமாக தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை.

பாஜக அண்ணாமலை
சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவி கொண்டிருக்கிறது. அதோடு பாமக நிறுவனர் இராமதாஸ், சசிகலா இருவரும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

இதனிடையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக இடம்பிடித்துள்ளது. இவர்களுக்கு 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாஜக சார்பாக போட்டியிட உள்ளவர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்றொரு பக்கம் முன்னாள் பாஜக மாநில தலைவரான அண்ணாமலைக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் இது சம்பந்தமாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் அண்ணாமலை. அதன்படி அவர் கூறுகையில், நான் யாரிடமும் சீட் கேட்கவில்லை. என்னோட வேலையை தொண்டனாக செய்து கொண்டிருக்கிறேன். தலைமை சொன்னால் பார்த்துக்கலாம். நேரம் வரும்போது இதைப்பற்றி பேசிக்கலாம் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார் அண்ணாமலை. இதன் மூலமாக தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக உறுதியாக எந்த பதிலையும் அவர் கூறவில்லை.
பியூஷ் கோயலுடன் சந்திப்பு
இதனிடையில் கோவையில் போட்டியிட விரும்பும் அண்ணாமலை, தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை இன்னு சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. அவரிடம் கவுண்டம்பாளையம் அல்லது சிங்காநல்லூர் தொகுதிகளை தனக்கு ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தாராம். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. இதுக்குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த சில நாட்களாக கோயம்புத்தூரில் இருந்தேன். சில விஷயங்களை பேசுவதற்காக என்னை பியூஷ் கோயல் வர சொல்லி இருந்தார்.
என்னோட வேலை முடிந்தது. மறுபடியும் நான் கோயம்புத்தூர் கிளம்புகிறேன். கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து முடிவையும் எடுப்பார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. கடந்த 2021 சட்டப்பேரவை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் அண்ணாமலை. இந்நிலையில் இந்த தேர்தலில் கரூருக்கு பதிலாக கோவையில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் வேட்பாளர்கள் பட்டியல்
இதனிடையில் கோவையில் ஒரேயொரு தொகுதியை மட்டும் பாஜகவுக்கு தருவதற்கு அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அண்ணாமலை விருப்பப்படி அவருக்கு கோவையில் நிற்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அதே சமயம் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இடங்களில் போட்டியிட உள்ளவர்கள் குறித்தான வேட்பாளர்கள் பட்டியில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தேர்தல் வாக்குறுதி
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 297 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் இல்லத்தரசிகளுக்கு இலவச குளிர்சாதன பெட்டி, மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கடந்த தடவை வாஷின் மெஷின் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், இந்த முறை ஃபிரிட்ஜ் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.