நாம் தமிழர் கட்சி திருச்சி,2026 சட்டமன்ற தேர்தல்: திருச்சியின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் அரசியல் களம்! – 2026 assembly elections political change awaits in tiruchirappalli

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் அரசியல் களம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சட்டமன்ற தேர்தல்
இந்தியாவிற்குத் தமிழ்நாடு எப்படியோ, அதுபோலவே தமிழக அரசியலில் திருச்சிராப்பள்ளி ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல்

சாதி மதங்களைக் கடந்து, வெளியூர்க்காரர்களையும் ஆதிக்கம் இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் பலமுறை மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த பெருமை திருச்சிக்கு உண்டு. மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் பக்குவம் கொண்ட இந்த நகரம், வளர்ச்சி மற்றும் மாற்றத்தை முன்னிறுத்திப் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சுழற்சி முறையில் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இருப்பினும், மக்களின் இந்த நம்பிக்கையை வெற்றி பெற்றவர்கள் முழுமையாகப் பூர்த்தி செய்தார்களா என்பது இன்றும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. இந்தச் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலானது திருச்சியின் எதிர்காலக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிர்ணயிக்கும் மிக முக்கியமான களமாகப் பார்க்கப்படுகிறது.

திருச்சியை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன

கடந்த சில ஆண்டுகளில் சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் திருச்சியை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக அண்டை மாவட்டங்களிலிருந்து மக்கள் அதிகளவில் இங்கு குடிபெயர்ந்ததால், நகரின் மக்கள் தொகை சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஈடாகப் போக்குவரத்து மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்பது நிதர்சனம்.

இரண்டாவது தலைநகரம் என்ற கோரிக்கை

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்து வந்தாலும், முற்றுப்பெறாத அரைவட்டச் சாலைகள், மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலவும் தாமதம் மற்றும் திருச்சிக்கு எனத் தனிப் போக்குவரத்துக்கழகம் இல்லாதது போன்ற குறைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் சேவைச் சாலைகள் 15 ஆண்டுகளாகக் காத்திருப்பில் இருப்பதும், பல மேம்பாலத் திட்டங்கள் முடங்கியிருப்பதும் நகரின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

கூட்டணிகள் சமபலத்துடன் வெற்றி

அரசியல் ரீதியாகப் பார்த்தால், கடந்த மூன்று தேர்தல்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் சமபலத்துடன் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. தற்போது ஆளுங்கட்சியான திமுக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைப் பிரச்சார ஆயுதமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவும், திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தங்களது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடி வருகின்றனர். மறுபுறம், கடந்த தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் இழந்த அதிமுக, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் துடிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து நகர்ப்புற வாக்காளர்களைக் கவரத் திட்டமிடுகிறது.

முக்கியப் பங்கு வகிக்கும்

இந்தத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இளைஞர்களின் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “மாற்றத்திற்காக வாக்களிப்போம்” என்ற முழக்கத்தோடு களம் காணும் இந்த இரு கட்சிகளுமே இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. திருச்சி மண்ணில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய் பெண்களுக்கு இடையேயும், அண்மையில் திருச்சியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்திய சீமான் இளைஞர்களிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்

திருச்சியில் அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற வரலாற்று உண்மை 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்று ஆட்சி அமைத்தது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். எனவே, 2026 தேர்தல் என்பது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்லாமல், முடங்கிக் கிடக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தி, திருச்சியைத் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி மையமாக மாற்றுவதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்.