நிச்சயமாக கூட்டணி அமைத்து போட்டி.. விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை? சசிகலாவின் அதிரடி முடிவு – form alliance to contest assembly election 2026 said sasikala party executive

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக விருப்பமனு வினியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறோம். உறுதியாக கூட்டணி அமைத்து தான் போட்டி என அஇபுதமமுக நிர்வாகி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

சசிகலா புதிய கட்சி
தமிழக சட்டபேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சில கட்சிகள் கூட்டணி குறித்தான முடிவுகளை அறிவிக்காமல் இருக்கிறது. குறிப்பாக ராமதாஸ் தரப்பிலான பாமக, சசிகலா ஆகியோரின் நிலைப்பாடு பற்றி இன்னமும் தெரியாமல் உள்ளது. இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை தவெக தரப்பு மறுத்துள்ளது.

புதிய கட்சி துவங்கிய சசிகலா

சட்டமன்ற தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளன்று கடந்த பிப்ரவரி 24 ஆம் புதிய கட்சியை துவங்கினார் சசிகலா. இதனை தொடர்ந்து இம்மாதம் 13 ஆம் தேதி அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டு, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிவித்தார்.
அஇபுதமமுக நிர்வாகி
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அஇபுதமமுக நிர்வாகி நரசிம்மன், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியுள்ளதாவது, “எம்ஜிஆர் முதன்முதலில் போட்டியிடும்போது எந்தளவுக்கு விருப்பமனு அளிப்பதற்கு கழக தோழர்கள் முன் வந்தார்களோ, அதே அளவுக்கு சசிகலாவின் புதிய இயக்கத்தின் சார்பாக போட்டியிட முன்வந்துள்ளனர்.
தவெகவுடன் பேச்சுவார்த்தை
எனவே இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். அதோடு வாய்ப்புள்ள அத்தனை கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த இயக்கம் என்று தெரிவிக்க முடியாது. வாய்ப்புள்ள அத்தனை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
விருப்பமனு வினியோகம்
நிச்சயமாக கூட்டணி உண்டு என்று உறுதியாக தெரிவித்துள்ளார் அஇபுதமமுக நிர்வாகி நரசிம்மன் தெரிவித்துள்ளார். இதனிடையில் அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று முதல் தனது கட்சி சார்பாக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பமனு வினியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இன்றிலிருந்து காலை 11.00 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamilஇதோடு நிறுத்திக்க வேண்டும்.. ஒட்டுமொத்த பெண்களையும் திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை
வரும் மார்ச் 22 ஆம் தேதி இரவு ஏழு மணி வரைக்கும் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஇபுதமமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாயும், தனித்தொகுதிக்கு ரூ. 3,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தவெக நிர்மல் குமார் மறுப்பு
இதனிடையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணியில் இணையாத நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் சசிகலா தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தவெகவின் நிர்வாகி நிர்மல் குமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார். கூட்டணி தொடர்பாக எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.