நிதிஷ்குமாருக்கு ஏறப்பட்ட நிலைதான்.. ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் கடும் விமர்சனம் – dmk minister sivasankar severely criticized admk edappadi palaniswami

நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அடிமைகளாக இருப்பதாக விமர்சனம் செய்திருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு தேமுதிகவை சார்ந்த எல்.கே. சுதீஷ் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் திமுக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இபிஎஸ் – சிவசங்கர்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்றைய தினம் மயிலாப்பூரில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி . அப்போது அவர் பேசுகையில் திமுக கூட்டணி கட்சிகளை அடிமையாக இருப்பதாக கடுமையாக விமர்சனம் செய்தார். அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தேமுதிகவை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார் இபிஎஸ்.

அமைச்சர் சிவசங்கர் பதிலடி

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுகவை சார்ந்த அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “என்டிஏ கூட்டணியின் தமிழக தலைவராக சொல்லப்படும் இபிஎஸ் திரும்ப திரும்ப தன்னுடைய சிக்கலை மறைப்பதற்கு திமுக கூட்டணியை விமர்சனம் செய்து வருகிறார். ஒருக்காலத்தில் வட இந்திய தலைவர்கள் அதிமுக தலைவரை சந்திப்பதற்கு, அவர் வீட்டு வாசலில் நின்றுள்ளனர்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி
இன்றைக்கு ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கு டெல்லி சென்று வரும் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவரையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகிறார். அவர் மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன், அன்புமணி இருவரும் டெல்லி சென்று வந்தனர். தங்களின் பிரச்சனையை டெல்லி தான் சரி செய்யும் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர். கூட்டணிக்கு தலைமை பாஜக, கூட்டணியில் முடிவு எடுப்பார் அமித்ஷா எனவும் அவர்கள் உணர்த்தியுள்ளனர்.
திமுக கூட்டணியில் நல்லுறவு
இப்படி இருக்கையில் திமுக கூட்டணியில் இருப்பவர்களை அடிமைகள் என்று இபிஎஸ் சொல்வது தேவையற்ற செயல். குறிப்பாக விசிக கட்சியை குறை சொல்கிறார். அந்த கட்சி எப்படி படிப்படியாக மேலே வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். நல்லுறவுடன் இருக்கும் திமுக கூட்டணியை விமர்சனம் செய்கிறார். அதே நேரம் அவருடைய கூட்டணியில் பாஜகவுக்கு கடந்த முறையை விட, அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவின் சின்னத்தில் கூடுதலாக கட்சிகள் போட்டியும் நிலை உள்ளது.
நோட்டாவுக்கு கீழ் தாமரை
இந்த தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே வைக்கப்பட்ட தாமரைக்கு மிகப்பெரிய இடத்தை இபிஎஸ் கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை, மகாராஷ்டிராவில் சரத் பவார் சந்தித்த இபிஎஸுக்கு வரும். கோவாவில் பாஜகவால் விழுங்கப்பட்ட மாநில கட்சிகளின் நிலை தான் அதிமுகவுக்கு வரப்போகிறது என்பதை மீண்டும் மீண்டும் அவர் தெளிவுப்படுத்தி கொண்டிருக்கிறார். முதலில் அதிமுக தொண்டர்களின் சுயமரியாதையை அவர் காப்பாற்ற வேண்டும்.
பின்னணியில் அமித்ஷா
ஆனால் அதை விடுத்து திமுகவை மீண்டும் மீண்டும் குறை கூறிக்கொண்டு இருக்கிறார். அவர் என்னதான் மேக்கப் போட்டு மறைத்தாலும், எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாடியும் அமித்ஷா தான் இருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். அதிமுக என்பதையே அடிமைதிமுக என்று பெயர் மாற்றும் அளவிற்கு கொண்டு சென்று விட்டார். இதனை அதிமுகவை சார்ந்தவர்களே குற்றம்சாட்டும் நிலையில் தான் இபிஎஸ் இருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆன்மா
மோடியா, லேடியா என்றுக்கேட்டு தேசிய கட்சியான பாஜகவுக்கு சவால் விட்டவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள். ஆனால் இன்றைக்கு மோடிதான் எல்லாம் என்று சொல்லி, மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவிற்கு இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். மீண்டும் மீண்டும் டெல்லிக்கு அடிபணிந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் அமைச்சர் சிவசங்கர். அதோடு கூட்டணி கட்சிகளுடன் பேசி ஒருமனதார முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.