சென்னையில் சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மாநகரப் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், மாநகரப் பேருந்துகள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் சாலையுடன் இணையும் இடங்களின் அருகேயுள்ள நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், சென்னையில் முதல் கட்டமாக பாரிமுனை – முகப்பேர் ( 7M bus route ) , வடபழனி – தரமணி ( 5 T bus route ) வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சென்னையில் மாநகர பேருந்துகளின் நிறுத்தம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

