சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக ‘பராசக்தி’ வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. இதனால் ஏகப்பட்ட கட்களை ‘பராசக்தி’ பெற்றது. பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. சென்சார் கூறிய திருத்தங்களை செய்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட்டது படக்குழு.
தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி வியூஸ்களை குவித்து வருகிறது. ஓடிடியில் வெளியான இரண்டே நாட்களில் ஒரு கோடி நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகி சாதனையை படைத்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் அன்சென்சார்டு (Uncensored) பதிப்பு தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது, திரையரங்குகளில் வெளியான தணிக்கை செய்யப்பட்ட பதிப்பாகும். ஆனால் தற்போது தணிக்கை செய்யப்படாத அசல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்பு மியூட் செய்யப்பட்ட வசனங்களுடன் அன்-கட் (Uncut) பதிப்பு வெளியாகியுள்ளதால், ‘பராசக்தி’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
