பெல்லாரி,
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் மாணவர் ஒருவர் இரும்புக் கம்பியால் சக மாணவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
பள்ளி விடுதியில் மாணவர்கள் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, மாணவர் ஒருவர் இரும்புக் கம்பியால் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய மாணவர் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடியநிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. சுமன் பென்னேகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பின் இதற்கான காரணம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
