தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களாக மற்ற கட்சியினரை விமர்சித்து பேசுவது பிரச்சாரத்தில் தலைதூக்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக பேசியிருந்தார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை, பால்டாயில் குடித்து போயிருக்க வேண்டும்.. இருந்து கொண்டு நம் உயிரை வாங்குவதாக எல்லை மீறி பேசியிருந்தார். அதுமட்டுமல்லாது, முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலேயே போயிருப்பார் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு அதிமுகவினர் மத்தியிலும் மற்ற கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், கொரோனாவில் முதல்வர் ஸ்டாலின் போய் சேர்ந்திருப்பார் என்று பழனிச்சாமி பேசியிருக்கிறார். அவருக்கு வாய் கொழுப்பு. முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு பயந்தவர் அல்ல.. கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்கே சென்று மக்களை பார்த்து வந்தவர்.
அப்படிபட்ட தலைவரை எடப்பாடி பழனிசாமி கேவலமாக பேசுகிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு கொலை, கொள்ளை எல்லாம் புதிதல்ல. ஏற்கனவே தன்னுடைய பங்காளிகளை 1979லேயே 3 பேரை கொலை செய்த வழக்கில் கொலை குற்றவாளியாக இருந்தார். அன்று அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால், அவர் ஆயுள் கைதியாக இருந்திருப்பார்.
எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் கொலைவெறி போகவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சால் தமிழக மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். பழனிசாமியால் மூடி மறைக்கப்பட்ட சாத்தான்குளம் கொலை வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. திமுக ஆட்சியால் அத்தனை பேருக்கும் மரண தண்டனையை நீதிமன்றம் கொடுத்துள்ளது. அதேபோல் கொடநாடு வழக்கிலும் தீர்ப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.
