பழனி,
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார். திருஆவினன்குடி கோவிலில் காவடி எடுத்து வழிபட்ட அவர் படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று தரிசனம் செய்தார். இதையடுத்து அடிவாரம் வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தைப்பூச திருவிழா நம் தமிழினத்திற்கு நெருக்கமான விழா. தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு வாழவும், கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா நலம் பெறவும் முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்திருக்கிறேன். நம் நாட்டின் மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை உட்கட்டமைப்பிற்கு மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் அடுத்த கட்டம் செல்வதற்கான சென்னை-பெங்களூரு, சென்னை-ஐதராபாத் விரைவு ரெயில் திட்டம், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டால் தென்னை, முந்திரி விவசாயிகள் பயனடைவார்கள். எல்லா ஆண்டும் தமிழக உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்.
எனவே இந்தியா முழுமைக்கும் சிறந்த பட்ஜெட். ஆனால் நம்ம முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் காரணங்களுக்கானது. ஆனால் இந்த பட்ஜெட் இந்தியா முழுமைக்குமான பட்ஜெட். பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை. எனவே அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி வருகிற 10-ந்தேதி பழனியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதில் நானும் கலந்து கொள்கிறேன். கரூர் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து எல்லாருக்குமான முதல்-அமைச்சர் என்பதை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
