கராச்சி,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நேரத்தில் போட்டியை நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஸ்குவாஷ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமை சீராகிய பின்னர் இந்த போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
