சென்னை,
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சமையல் கியாஸ் தட்டுப்பாடு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும். உலக நாடுகள் முழுவதுமே சமையல் கியாஸ் பதற்றநிலை இருக்கிறது. இதை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிந்திருக்கவில்லை. இதில், அவர் அரசியல் செய்கிறார். இது தேர் ்தலுக்கான போராட்டம் அல்ல. மக்களுக்கான போராட்டம்.
தேர்தல் தேதி அறிவிக்கும் சூழலில் தி.மு.க. கூட்டணியாவது பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. ஆனால், பா.ஜனதா, அ.தி.மு.க. இன்னும் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அவர்கள் கூட்டணி அமைப்பதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள். 2021-ல் தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இழுக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதில் தே.மு.தி.க.வை இழந்து நிற்கிறார்கள்.
தற்போது த.வெ.க. தலைவர் விஜய்யை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவருகிறது. அவருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். பா.ஜனதாவின் அச்சுறுத்தலுக்கு விஜய் அடிபணிந்தால் அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும். மற்ற மாநிலங்களில் பா.ஜனதா என்ன செய்ததோ அதையே தமிழகத்திலும் செய்ய நினைக்கிறது. நண்பர் விஜய் அதற்கு இணங்க மாட்டார் என்று நம்புகிறேன். ஓரிரு நாளில் விடுதலை சிறுத்தைகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
