தமிழக பாஜக இதுவரை வேட்பாளர்களை இறுதி செய்யாத நிலையில், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. குறிப்பாக 6 தொகுதிகளில் தான் நெருக்கடி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
அப்படி பார்த்தால் ஏப்ரல் 6 ஒரே ஒரு நாள் மட்டும் தான் எஞ்சியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். கடைசி வரை இழுபறியாவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரிக்கையில், 2026 தேர்தலை ஒட்டி ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர். ஆனால் எஞ்சிய 6 தொகுதிகளில் இறுதி செய்வதில் தான் சிக்கல் நீடிக்கிறது. அவை,
பிரதமரை புறக்கணித்த Annamalai! வியூகம் என்ன?
| எண் | தொகுதி | களமிறங்கும் வேட்பாளர்கள் |
| 1 | திருப்பூர் தெற்கு | திமுக மேயர் தினேஷ் குமார், நாம் தமிழர் பேரறிவாளன், தவெக சத்யபாமா |
| 2 | ராமநாதபுரம் | திமுக முத்துராமலிங்கம், நாம் தமிழர் முத்து கேசவன், தவெக சாகுல் ஹமீது |
| 3 | மானாமதுரை | திமுக தமிழரசி ரவிக்குமார், நாம் தமிழர் சண்முகப்பிரியா, தவெக இளங்கோவன் |
| 4 | அறந்தாங்கி | நாம் தமிழர் முத்துலட்சுமி, தவெக பர்வேஸ் (காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை) |
| 5 | ஆவடி | திமுக சா.மு.நாசர், நாம் தமிழர் புனிதா, தவெக ரமேஷ் |
| 6 | புதுக்கோட்டை | திமுக முத்துராஜா, நாம் தமிழர் எழிலரசி, தவெக ஷரிப் |
தொகுதிக்கு 3 பேர் – டெல்லி சென்ற லிஸ்ட்
இதுதொடர்பாக தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த 6 தொகுதிகளில் போட்டியிட தகுதி வாய்ந்த தலா மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து, அதுதொடர்பான பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எப்படியும் இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும் எனக் கூறுகின்றனர்.
வானதி தொகுதியை விட்டு தருவாரா?
அடுத்து அண்ணாமலை பிரச்சினைக்கு வருவோம். இவரை போட்டியிட வைக்க பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்ததில் இருந்தே மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார். 2026 தேர்தலில் தனக்கு அளிக்கப்பட்ட தொகுதி பொறுப்பையும் தவிர்த்துவிட்டார். இதற்கு மத்தியில் அவரை சம்மதிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்றத் தொகுதியை அண்ணாமலை எதிர்பார்க்கிறார். ஏனெனில் 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.
மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் வடக்கு ஆப்ஷன்
இதன்கீழ் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமான வாக்குகளை கிடைத்தன. இதை கருத்தில் கொண்டு தற்போது சாதகமான அம்சங்கள் உடன் இருக்கும் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 தொகுதிகளில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளயம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வானதி சீனிவாசனுக்கு மட்டும் கோவை வடக்கு தொகுதியை அதிமுகவிடம் தமிழக பாஜக கேட்டு பெற்றிருந்தது. இதனால் அண்ணாமலை ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் மொடக்குறிச்சி அல்லது திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அண்ணாமலை உடன் பியூஷ் கோயல் தனியாக 30 நிமிடங்கள் பேசி பார்த்துள்ளார். இதுபோன்ற விஷயங்களால் தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.
