பாஜகவுக்குத்தான் பழனி தொகுதி.. முரண்படும் பாஜகவினர்.. கோயில் இருக்கும் தொகுதி என்பதாலேயா? – motive behind fight is to ensure that palani constituency goes to bjp in 2026 elections

பழனி தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் அந்த தொகுதி தற்போது பாஜகவுக்கு ஒதுக்கப்படாமல், அதிமுகவே அதில் போட்டியிடுகிறது.

Palani Constituency
தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு பணிகள் முடிவடைந்து, எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பதும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

பாஜக அதிருப்தி

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பழனி சட்டமன்றத் தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதும், பழனி பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி அதிகரித்தது. நீண்ட காலமாக அந்தத் தொகுதியில் கட்சிக்காக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், இந்த முறை அந்தத் தொகுதி பாஜகவிற்கு வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்காததால், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பாஜக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவினர் போராட்டம்

இந்த போராட்டம் பழனி நகரில் முக்கிய சாலைகளில் நடைபெற்றதால், ஒரு கட்டத்தில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது, சிலர் சாலையில் தேங்காய்களை உடைத்து தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
“பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள், இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

பாஜகவுக்குத்தான் பழனி தொகுதி

பாஜக தொண்டர் ஒருவர் திடீரென கட்சி அலுவலக கட்டிடத்தின் மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். “பழனி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை என்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று அவர் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து பழனி பாஜக நகர தலைவர் ஆனந்தகுமார் விளக்கமளிக்கையில், பழனி தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்ததாக கூறினார். கடந்த சில மாதங்களாக கட்சித் தொண்டர்கள் தொகுதியில் கடுமையாக களப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முரண்பட்ட பாஜகவினர்

இது கட்சியின் கோரிக்கை மட்டுமல்ல, அப்பகுதி மக்களின் விருப்பமும் அதுதான் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், அதிமுகவிற்கு வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், பழனி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. ரவி மனோகரன் போட்டியிட உள்ளார்.

பாஜக வேட்பாளர்கள் தொகுதிகளை மாற்றி போட்டி? வியூகம் தான் என்ன?

கோயில் தொகுதி என்பதாலேயோ?

ஆனால் பழனி தொகுதியை பாஜக கேட்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது? என்னவென்றால் சனாதான தர்மத்தை கடைபிடிக்கு பாஜகவுக்கு, மயிலாப்பூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய கோவில் தலங்கள் அடங்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஏனென்றால் அங்கு இந்துக்கள் அதிகம் என்பதால், தங்களது பெரும்பான்மையை பாஜக நிரூபிக்க முடியும்.
அதே கண்ணோட்டத்தில் தான் பழனி தொகுதியையும் பாஜக பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.