பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
அதாவது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகித்திருந்த நிலையில் அதிமுக பிறந்து வீடு என்றும், பாஜக புகுந்த வீடு எனவும் கூறியிருந்தார் ஏ.சி. சண்முகம். அதோடு பிறந்த வீட்டில் இருந்து ஒரு சீட்டும், புகுந்த வீட்டில் இருந்து ஒரு சீட்டும் சீதனமாக புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் ஏ.சி. சண்முகம் கட்சி குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
ஏ.சி. சண்முகம் அறிவிப்பு
இது அக்கட்சியினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுக்குறித்து ஏ.சி. சண்முகம் கூறுகையில், நான் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை. ஒரு வலுவான தொகுதியை எனக்கு கொடுத்தார்கள். எனவே பாஜக வழங்கிய தொகுதியை அவர்களிடமே திருப்பி வழங்கி விட்டேன். அந்த தொகுதிக்கு நல்ல வேட்பாளரை நானே அவர்களிடம் கூறினேன். எனவே புதிய நீதிக்கட்சி ஒரே தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார் ஏ.சி. சண்முகம்.
புதிய நீதிக்கட்சி வேட்பாளராக சுந்தர் சி
இதனால் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்த்த, அந்த கட்சியின் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு வழங்கியுள்ள ஒரு தொகுதியில் சுந்தர் சி வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி
இதற்கான பிரச்சாரத்தை சுந்தர் சி துவங்கியுள்ளார். மற்றொரு பக்கம் மதுரை மத்திய தொகுதியில் வலிமையான வேட்பாளாராக திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்குகிறார். குடும்ப பராம்பரியம், கட்சி வலிமை ஆகியவற்றின் மூலமாக இந்த தொகுதியில் பிடிஆர் பலம் வாய்ந்த வேட்பாளாராக இருக்கிறார். அவருக்கு எதிராக இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுகிறார். அவர் எந்தளவுக்கு பிடிஆருக்கு போட்டியாக இருப்பார் என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இதனிடையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி, தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை எதிர்க்கட்சி களமிறக்கி உள்ளதாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு பிடிஆருக்கு டெல்லி வரையிலும் ரசிகர்கள் இருப்பதாகவும் புகழ்ந்து இருந்தார். இதனால் மதுரை மத்திய தொகுதி சுவாரஸ்யமான போட்டி நிறைந்த அரசியல் களமாக மாறியுள்ளது.
அண்ணாமலை போட்டியில்லை
மேலும் இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவையில் போட்டியிடுவதற்காக அவர் பெருமளவில் முயற்சி செய்த நிலையில், கோவை வடக்கு தொகுதி வேட்பாளாராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
