பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஃப்ரெண்ட்லி மேட்ச் விளையாடியிருக்கிறது என உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளால் சிக்கல்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு “மாம்பழம்” சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பான கடிதத்தை அனுப்பியதால் இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை கட்சியின் தலைவராக அங்கீகரித்ததாக சொல்லப்பட்டது.ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு, அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யவும், அந்த கடிதத்தை தனக்கு அனுப்ப இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உட்கட்சி பிரச்சனை தீரும் வரை தேர்தலை தள்ளி வைக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சி தொடர்பான வழக்கு மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ள நிலையில் கட்சி யாருக்கு என்ற முடிவு தெரியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த விவகாரத்தில் பிரச்சனை எழும் பட்சத்தில் சின்ன முடக்கப்படும் என தெரிவித்ததையும் உச்ச நீதிமன்றத்தில் கூறினார்.
குடும்ப பிரச்சனை போல தெரிகிறது
அதற்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குடும்பப் பிரச்சனை போல தெரிகிறது எனவும், மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ் தரப்பு இன்னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி தரப்பு ஏற்கனவே சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என பதிலளித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தெரிந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி “தேர்தல் ஆணையம் ஒரு கட்சிக்குள் பிரச்சனை எழுந்தால் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றங்களில் தெரிவித்துள்ளது என கேள்வி எழுப்பியதோடு, உரிமை குரல் விவகாரத்தில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்கி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினர். மேலும் ‘பாட்டாளி மக்கள் கட்சி’ சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகவும் பாதுகாப்பான முறையில் ஃப்ரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக மீண்டும் சிவில் நீதிமன்றத்தை நாடி 2 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் இரு தரப்பும் தாக்கல் செய்யக்கூடிய மனுக்கள் அடிப்படையில் சிவில் நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்குள்ளாக வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த பிறகு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராமதாஸ் & அன்புமணி தரப்பை நோக்கி, நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது என சிரித்தபடி கூறினர்.
