சென்னை,
‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் வலைதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெண்களின் உரிமை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் நாள் மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்குச் சம உரிமை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மறுக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து, முதன்முதலில் பெண்ணுரிமை குறித்து உரத்த குரலில் கவிதைகள் பாடியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
தமிழ் மொழியின் பெருமைமிகு கவிஞர்களில் முன்னணியில் திகழ்பவர் பாரதியார். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்த அவர், சிறுவயதிலேயே கவித்திறனால் “பாரதி” என்ற பட்டம் பெற்றார்.
பாரதியார் ஒரு கவிஞர் மட்டுமல்ல; விடுதலைப் போராட்ட வீரர் ! சமூகச் சீர்திருத்தவாதி ! பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்த முன்னோடி! தேசிய உணர்வின் தீப்பொறி ! அவரது கவிதைகள் தேசபக்தி, சமத்துவம், பெண்மையின் பெருமை, சாதி ஒழிப்பு, மனிதநேயம் போன்ற உயரிய சிந்தனைகளை எடுத்துரைப்பரவை.
“அச்சமில்லை அச்சமில்லை”, “எண்ணிய முடிதல் வேண்டும்”, “சின்னஞ்சிறு கிளியே”, “வந்தே மாதரம்” போன்ற அவரது பாடல்கள் இன்றும் இளைஞர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கின்றன. தமிழின் இனிமையையும் வீரத்தையும் இணைத்து எழுதியவர் பாரதியார். சமூக அநீதிகளுக்கு எதிராக உரத்த குரலில் முழங்கியவர்! அவரது சிந்தனைகளும் படைப்புகளும் காலத்தைக் கடந்து முழங்கியவர் நிலைத்து நின்று இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தமது இறுதி நாள்களில் (1920-1921) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் அருகில் அமைந்துள்ள வீட்டில் வசித்தார். மகாகவி பாரதியார் அவர்களின் சிறப்பை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செய்தித் துறையின் மூலம், இறுதி நாட்களில் அவர் வசித்த இல்லத்தை ‘பாரதியார் நினைவு இல்லமாக’ பராமரித்து வருகிறது.
அதேபோல எட்டயபுரம் மற்றும் வாரணாசியில் அவர் வாழ்ந்த இல்லங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் பாரதியார் நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்புகள், முக்கிய தலைவர்கள் உடன் இருக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டின் மகத்தான கவிஞர் வாழ்ந்த இல்லங்களைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டுப் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மகாகவி பாரதியார் குறித்த தகவல்களைச் சமூக ஊடகம் வாயிலாக இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செய்தித் துறையின் மூலம் ‘பாரதியார் இல்லம்’ என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம்(Instagram) வலைதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பாரதியார் அவர்களின் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், காணற்கரிய புகைப்படங்கள், காணொலிகள் தொடர்ந்து பதிவேற்றப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள், இளைஞர்கள், இன்றைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் இப்பக்கத்தினைப் பின் தொடர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வலைப்பக்கத்தினை பின் தொடர: https://www.instagram.com/bharathiyar_illam?igsh=NTVweHVrMml0anox ”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
