பிரசாந்தை பார்த்தால் பொறாமையாக இருக்கும்.. விஷால்

சென்னை,

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘ரஞ்சன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்ளிட்ட பலர் அறிமுகமாகின்றனர். இப்படத்தை தியாகராஜன் இயக்குகிறார். பிரீத்தி தியாகராஜன் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்துக்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இது தெலுங்கில் வெற்றி பெற்ற ‘கோர்ட்’ படத்தின் ரீமேக். இதில் வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார். படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவில் நடிகர் விஷாலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் வியந்து பார்த்த பல படங்களில் நடித்தவர் நடிகர் பிரசாந்த். எங்கள் பக்கத்தில் முன்னாடி இருக்கும் பெண்கள் எல்லாம் பிரசாந்தை பார்த்து பயங்கரமாக சைட் அடிப்பாங்க… எங்களுக்கு எல்லாம் பொறாமையாக இருக்கும்… தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்து இருப்பார். ஒரு நடிகர் தனது இலக்கை அடைய கூட எப்போதும் ஒருத்தர் இருக்க வேண்டும். பிரசாந்துக்கு தியாகராஜன் சார் தொடக்கத்தில் இருந்து இப்ப வரை இருக்கிறார். அவருடைய உழைப்பு, தொலைநோக்கு பார்வைதான் பிரசாந்தை இப்பவும் உயரத்தில் வைத்துள்ளது. எனவே அவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் அப்பாவும் தியாகராஜன் சார் பற்றி நிறைய சொல்லியிருக்கார்” என்றார்.

Source link