பிரதமர் மோடியின் தவறான வெளியுறவுக்கொள்கை விளைவை நாட்டு மக்கள் சந்திக்கின்றனர்; காங்கிரஸ் சாடல்

டெல்லி,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அரபிக்கடலின் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைபட்டு இந்தியா உள்பட ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 115 உயர்த்தப்பட்டு ரூ. 2,044 க்கும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 60 உயர்த்தப்பட்டு ரூ. 928 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தவறான வெளியுறவு கொள்கை விளைவை நாட்டு மக்கள் சந்திக்கின்றனர் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை குறைவாக இருந்தபோது அதன் நன்மைகளை மக்களிடமிருந்து மோடி அரசு பறித்தது. தற்போது, பணவீக்கத்தால் அவதிப்படுவரும் நாட்டு மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்றப்பட்டுள்ளது. போர் தொடங்கியபோது அனைத்தும் சரியாக உள்ளது என கூறிவந்த மோடி அரசு தற்போது போதிய கியாஸ் சிலிண்டர், உரம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது. பிரதமர் மோடியின் தவறான வெளியுறவுக்கொள்கை விளைவை நாட்டு மக்கள் சந்திக்கின்றனர். மக்கள் ஏன் இந்த விளைவை சந்திக்க வேண்டும்?

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link