புதுச்சேரியில் நாராயணசாமி போட்டியிட மறுப்பு… நெல்லித்தோப்பு தொகுதிதான் பிரச்சனையா? – former cm narayanasamy declines to contest in puducherry

நெல்லித்தோப்பு பகுதியில் போட்டியிட விரும்பிய புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு புது சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Puducherry former CM Narayanasamy(புகைப்படங்கள்Samayam Tamil)
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் நாரயண சாமிக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல். காங்கிரஸ் மாநிலத்தலைவர் வைத்தியலிங்கம் வீட்டை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புடன் நடக்க உள்ளது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்றோடு புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும்.

இந்தசூழலில் தான் புதுச்சேரியில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி கடுமையான இழுபறியில் தொடர்கிறது. நேற்றைய தினம் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஒரு முடிவுக்கு வந்தாலும் யாருக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பல சிக்கல்கள் நீடித்து வந்தது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து நாராயண சாமியின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்தியலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தேர்தலை ஒட்டி திமுக காங்கிரஸ் கூட்டணியில் பூசல் நிலவி வந்த சூழலில் காங்கிரஸ் கட்சியினுடைய உள்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல்லித்தோப்பு தொகுதியால் விளைந்த பிரச்சனை?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக புதுச்சேரியில் 6 இடங்களில் வெற்றி பெற்றது. 30 இடங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட போதும் இரண்டு இடங்களில்தான் காங்கிரஸ் கட்சி வென்றது. அதனை தொடர்ந்து இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தரப்பில் 15 லிருந்து 16 தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் தர விரும்பவில்லை என்று எனவும், இதன் காரணமாகவே கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதோடு மட்டுமல்லாது முன்னாள் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அந்த நெல்லித்தோப்பு தொகுதியை இம்முறை திமுக கேட்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு சுமூகமாக எட்டுப்படாத சூழலில் நாராயணசாமி நேற்று கோபத்துடன் வெளியேறியதாகவே சொல்லப்படுகிறது.
இது போன்ற ஒரு சூழலில் தான் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிவடையக்கூடிய இந்த நிலையில் நாராயணசாமி தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்தியலிங்கம் வீட்டை அவரை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு இருக்கின்றன.

பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சிக்கல்

மற்றொருபுறம் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இவர்களின் இந்த கூட்டணியில் அதிமுக ஏற்கனவே இணைந்திருக்க கூடிய சூழலில் புதிதாக கட்சி தொடங்கிய லாட்டரி அதிபர் மகன் மாட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியும் இணைந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதிமுகவிற்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த கூட்டணியும் சிக்கலில் சென்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த இரண்டு கூட்டணியில் எந்த கூட்டணி வெல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.