நம்ம மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதில் பெரிதும் இழுபறியாக தொடர்ந்து வரும் சூழலில், புதிய தீர்வை நோக்கி நகர்ந்துள்ளனர். முதல்கட்டமாக 9 ரயில் நிலையங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளை அமைக்க திட்டமிட்டிருக்கின்றனர்.
நம்ம மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்
ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இட நெருக்கடியால் தவித்து கொண்டிருக்கின்றன. எனவே பார்க்கிங் நிரம்பி அருகிலுள்ள சாலையோரம் பார்க்கிங் செய்து விட்டு செல்வதை பார்க்க முடிகிறது. இது வேறு சில பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. எனவே அதிகப்படியான பயணிகள் வருகை இருக்கும் 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வருகிறது மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள்
அவை, மைசூரு ரோடு, பையப்பனஹள்ளி, ஜே.பி.நகர், பீன்யா இண்டஸ்ட்ரீ, எலக்ட்ரானிக் சிட்டி, ஜெயதேவா ஹாஸ்பிடல், ரகிகுட்டா, பிடிஎம் லேஅவுட், மாதவரா ஆகியவை ஆகும். இந்த பார்க்கிங்கில் 24×7 அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு வசதிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் கணினி மயமாக்கம் செய்யப்பட்ட டிக்கெட் வசதி, தீயணைப்பு கருவிகள், வாகனங்கள் திருடு போகாமலும், சேதமடையாமலும் தடுக்கும் வகையிலான வசதிகள் வரவுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களில் வரவுள்ள மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளால் அருகிலுள்ள தனியார் பார்க்கிங்கில் அதிக கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.
இருசக்கர, 4 சக்கர வாகன பார்க்கிங் கட்டணம்
இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 30 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதிகளை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக 21 சதவீத மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியே இல்லை.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இட நெருக்கடி
உதாரணமாக மெஜஸ்டிக், எம்.ஜி.ரோடு, இந்திரா நகர், சிக்பேட் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களை சொல்லலாம். ஏனெனில் இடவசதி இல்லை. அருகிலுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. அதிகப்படியான செலவு, மிகவும் நெருக்கடியான நகரப் பகுதிகள் போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பார்க்கிங் வசதிகளில் நிலவும் சிக்கல்களை தீர்க்க வேறு என்ன நடவ்டிக்கைகளை எடுக்கலாம் என்ற கோணத்தில் ஆராய வேண்டியுள்ளது.
மல்டி மோடல் போக்குவரத்து வசதிகள்
அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்கள் உடன் கடைசி மைல் தொலைவு வரை ஃபீடர் பேருந்து சேவைகளை விரிவுபடுத்தலாம். இதனால் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பேருந்தில் ஏறினால் நேரடியாக ரயில் நிலையங்களுக்கு சென்றுவிடலாம். இதன்மூலம் சொந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. இதுதவிர மெட்ரோ, புறநகர் ரயில், மாநகரப் பேருந்து என மல்டி மோடல் போக்குவரத்து சேவைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
