பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைப்பு – நாளை காலை 6மணி முதல் அமல்

கடந்த 663 நாட்களாக இந்தியா முழுவதும் ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த விலை மாற்றம் மார்ச் 15ம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்றின் போது உலகமே முடங்கி பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்தது. அப்போது இந்தியாவில் விலை குறைப்பு நடக்கவில்லை. அதற்கு முன் மிகுந்த நஷ்டத்தில் இருந்ததால் விலையை குறைக்கவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. இதைதொடர்ந்து படிப்படியாக விலை ஏற்றம் உலகம் முழுவதும் நிகழ்ந்த போது, அதிக லாபத்தை ஈட்டிய எண்ணெய் நிறுவனங்கள் அதனை ஈடுகட்டி விலை ஏற்றம் செய்யவில்லை. 

இதனடிப்படையில், கடந்த 2 ஆண்டுகள், சரியாக 663 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடித்து வந்தது. இதன்படி, சென்னையில், ரூ.102.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மத்திய அரசு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 குறைக்கப்படுவதாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த விலை குறைப்பு மூலம் சுற்றுலா வருமானம் ஈட்டப்படும், பணவீக்கம் குறையும், போக்குவரத்து செலவுகள் குறையும் என ஹர்தீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதன்படி நாளை (மார்ச்- 15) காலை 6 மணி முதல் இந்த புதிய விலை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின் அடிப்படையில், சென்னையில் ரூ.102.60 -ஆக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Source link