தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதியான பெரம்பூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
- பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு
- தவெக சார்பில் பெரம்பூரில் விஜய் போட்டி
- விஜய்க்கு விட்டுக் கொடுக்கும் அதிமுக?
பாமகவுக்கு 18 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ்க்கு 5 தொகுதிகள் என அடுத்தடுத்து சிறிய கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தாண்டி மீதி 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாமக தொகுதிகள் பட்டியல்
இதில் பாமவுக்கு சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு மற்றும் அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி
இதில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுவது பெரம்பூர் தொகுதி.. காரணம் என்னவென்று பார்த்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் கட்சியான தவெகவின் தலைவரும் நட்சத்திர வேட்பாளருமான விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கி இருக்கிறது அதிமுக.
பாமகவுக்கு ஒதுக்கியது ஏன்?
அதற்கான காரணம் என்ன? ஒரு வேளை விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுவார் என்று எடுத்துக் கொண்டாலும் அப்படியான தொகுதியில் கடும் போட்டியாளரை அல்லவா நிறுத்த வேண்டும். அல்லது அதிமுக சார்பில் யாராவது போட்டியிட வேண்டும் அல்லவா? அதை விட்டுவிட்டு பாமகவுக்கு ஒதுக்கியது ஏன்?
விட்டுக் கொடுக்கிறதா அதிமுக?
அப்படியானால், அந்த தொகுதியை விஜய்க்கு விட்டுக் கொடுக்கிறதா அதிமுக? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்து உள்ளது. இப்போது விட்டுக் கொடுத்தால் தான், எதிர்காலத்தில் விஜய்யின் மூலம் அதிமுகவுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்று அதிமுக எண்ணுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறது.
தவெக விஜய் vs பாமக வேட்பாளர்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூரில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளையும் தொடங்கி உள்ள நிலையில், அதிமுகவின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வலுவான போட்டியாளரை நிறுத்தினால் மட்டுமே விஜய்யை விட அதிக ஓட்டுகள் வாங்க முடியும் என்ற சூழல் நிலவும் நிலையில், இப்படியோரு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தது ஏன் என்று அதிமுக தொண்டர்களும் குழுப்பத்தில் உள்ளனர்.
Anbumani vs Ramadoss: யார் கையில் PMK? முக்கிய அரசியல் விவாதம்
அதிமுகவின் நோக்கம்
இல்லையென்றால் திமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தவெக விஜய்யும் பெரம்பூர் தொகுதியில் முட்டிக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் காரணமா என்றும் கேள்விகள் எழத்தொடங்கி உள்ளன. ஆக மொத்தம் பாமகவுக்கு பெரம்பூர் தொகுதியை ஒதுக்கிவிட்டு, அந்த தொகுதியை விஜய்க்கு தாரைவார்த்துக் கொடுத்து உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
