பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரம்பூரில் இன்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. செங்கோட்டையன், மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும்” என்ற சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தமிழகத்தில் உழைக்கக்கூடிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஒரு சிறப்பு பெரம்பூர் தொகுதிக்கு உள்ளது. எனவே, விஜய் இங்கிருந்து போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும்” என்று கூறி தீர்மானத்தை வழிமொழிந்தார்.

ஏற்கெனவே சென்னை விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு, நாகை உள்ளிட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது சென்னையில் விருகம்பாக்கத்திற்கு பதிலாக, விஜய் பெரம்பூரில் களம் காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source link