மகளிர் தினத்தில் தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களை கவர புது வியூகம்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட இருக்கிறது.

எந்தவொரு கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கு முன்பாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை மக்களுக்காக கொண்டுவருவோம் என்பதை தேர்தல் அறிக்கையாக தயாரித்து வெளியிடுவது வழக்கம். தேர்தல் நேரத்து கதாநாயகனே ஒவ்வொரு கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தான்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஜே.சி.டி.பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, சம்பத்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் 5 மண்டலங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டனர். இணையதளம் மூலமும் மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது.

மகளிர் தினத்தில் வெளியீடு

இந்த நிலையில், தற்போது தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் தினத்தன்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மையமாக கொண்டு தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விவசாயம், மீனவர்கள், தொழிலாளர்களுக்கு அதில் முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Source link