சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
துறவறத்தின் அடையாளமாக திகழ்ந்தவரும், அனைத்து உயிரினங்களையும் மதித்தவருமான மகாவீரரின் பிறந்தநாளைக் கொண்டாடும் சமண சகோதரர், சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல… மனிதர்கள் பின்பற்ற வேண்டிய பாடம். ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக ஓடும் உலக மக்கள், அதற்காக என்னென்னவற்றை எல்லாம் இழக்கிறோம் என்பதை இன்றைய உலகில் காண்கிறோம். ஆனால், மகாவீரரோ, இதையெல்லாம் உணர்ந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சிப் பொறுப்பையே வீசி எறிந்து துறவறம் பூண்டவர்.
எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த, இல்லாமை என்பதே இல்லாததாகவும் மாறும். அதை உணர்ந்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழவும், அவர் விரும்பியவாறு மது இல்லாத உலகம், அன்பு நிறைந்த மக்களை உருவாக்கவும் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
