மும்பை,
முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் காலியான பாராமதி தொகுதிக்கு வரும் 23ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி சார்பில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார்.
அஜித் பவார் மீதான மரியாதையின் காரணமாக எதிர்க்கட்சிகளான சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) மற்றும் உத்தவ் தாக்கரேவின் உத்தவ் சிவசேனா ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
ஆனால், காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோரே வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருந்தார். இவரது வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வேட்பு மனு வாபஸ் பெறும் நாளான இன்று திடீர் திருப்பமாக வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாரமாதி தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
