சென்னை,
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கு, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் (வயது 54) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தமிழக மக்களுக்கு அறிமுகம் இல்லாத கிறிஸ்டோபர் திலக், திருச்சியை சேர்ந்தவர் ஆவார். சிறுபான்மையின கிறிஸ்தவரான இவர், மதுரை தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரியிலும், தியாகராஜர் நிர்வாகவியல் பள்ளிலும் பட்டம் பெற்றுள்ளார்.
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். டாமி ஹில்பிகர் நிறுவனத்திலும் பணியாற்றி உள்ளார். தற்போது, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழுவிலும் இடம்பிடித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் பழைய முகங்கள் பலர் வாய்ப்பு கேட்டு காத்திருந்த நிலையில், புதுமுகம் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
