சென்னை,
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி 01.12.2023 முதல் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு குறித்து ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக ஊழியர்களுக்கு, 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வும், 01.12.2023-ம் நாளன்று, 10 வருடங்கள் பணி முடித்த ஊழியர்களுக்கு பணிப் பலனாக (Service Weightage) 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
மேலும் 01.12.2023 அன்று 10 வருடங்கள் பணி முடித்த அலுவலர்களுக்கு 01.12.2023-ம் நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் பணிப் பலனாக (Service Weightage) வழங்குவது எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அலுவலர்களுக்கு ரூ.3,000/- முதல் ரூ.7,000/- வரை சிறப்புப்படி வழங்கவும் ஆணையிடப்படுகிறது.
மேற்காணும் அறிவிப்பினை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர் சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் 13.03.2026-ம் அன்று தமிழ்நாடு மின்வாரிய தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இவ்வூதிய உயர்வு மூலம் ஏற்படும் நிலுவைத் தொகை 01.12.2023-ம் நாள் முதல் கருத்தியலாகக் (Notional) கணக்கிட்டு, 01.12.2025-ம் நாள் முதல் பணப் பலன்கள் வழங்கவும்.
மேலும், இடைப்பட்ட காலத்திற்கு அதாவது 01.12.2023 முதல் 30.11.2025 வரை கருணைத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வீதம் கணக்கிட்டு 24 மாதங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவை தொகையினை ஒரே தவணையாக வழங்கவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வூதிய உயர்வு வாயிலாக, அனைத்து ஊழியர்களும் மற்றும் அலுவலர்களும் பயன் அடைவார்கள் என்பதனை கூடுதலாக தெரிவிக்கப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
