அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் போட்டியிடும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், விஜய் கட்சி வருகிற தேர்தலில் 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
கடைசி நேரத்தில் வேட்பாளர் மாயம் என தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்ட பின்னணி என்ன? வேட்பாளர் எங்கே தான் இருக்கிறார்? எடப்பாடி தொகுதியில் என்ன தான் நடக்கிறது?

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி புதியதாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின், 234 தொகுதிகளிலும் போட்டி என்ற கனவு ஒரே ஒரு வேட்பாளர் மூலம் சுக்குநூறாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பு மனு தாக்கல் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்பு மனு பரிசீலனை 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர தொகுதியான எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

வேட்பு மனுவில் திருத்தம் பரிசீலனையின் போது, வேட்பு மனுவில் திருத்தம் இருப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி கூறவே, ஆவணங்களை எடுத்து வருவதாக வீட்டுக்குச் சென்றவர், அதற்கு பிறகு வரவே இல்லை எனக் கூறப்படுகிறது. ஆவணங்கள் எடுத்து வருவதாக வீட்டுக்குச் சென்றவர் எங்கே சென்றார் என, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நின்ற த.வெ.க.வினர் பதறிப் போக, செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் வேட்பாளர் அருண்குமார் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பர பரப்பை கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளர் எங்கே? என பேசப்பட, காவல் துறையும் விசாரணையில் இறங்கிய நிலையில், வேட்பாளர் அருண்குமார் கடைசியில் அவரது வீட்டிலேயே இருந்தது தெரியவந்து, விவகாரம் அமைதியானது.

என்ன தான் நடந்தது?அதாவது, வேட்பு மனுவை தாக்கல் செய்ய குறிப்பிட்ட நபர்கள் முன் மொழிய வேண்டும் என்ற நிலையில், அருண்குமாரின் வேட்பு மனுவில் 10 பேருக்கு பதிலாக 7 பேர் மட்டுமே முன் மொழிந்திருந்ததாக கூறப்படுகிறது.

வேட்பாளர் அருண் குமாருக்கு மாற்றாக அவரது மனைவி நித்யா வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவிலும் குளறுபடி இருக்கவே மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டு, எடப்பாடி தொகுதியில் த.வெ.க. போட்டியிடவே முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 8ஆவது முறையாக போட்டியிட இருக்கும் நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை தேர்வு செய்த விஜய் கட்சியில் ஏற்பட்ட கடைசி நேர குழப்பம் கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

செங்கோட்டையன் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளராக இருந்த அருண்குமார், அதிமுகவில் அயோத்தியா பட்டினம் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த நிலையில், செங்கோட்டையன் சிபாரிசில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் த.வெ.க.வில் இணைந்திருக்கிறார். அதிமுக, திமுக என மாறி மாறி கட்சி தாவி வந்த அருண்குமார், த.வெ.க.வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தான், திடீரென வேட்பு மனுவை கூட முறையாக தாக்கல் செய்யாமல் தள்ளுபடி செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட பின்னணியில் அலுவல் ரீதியாக எந்த காரணமும் இல்லை என்றாலும் அரசியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், ஆவணங்களை எடுத்து வருவதாக சென்ற அருண்குமார், திடீரென த.வெ.க.வினருடன் தொடர்பை துண்டித்து தலைமறைவாக இருந்து கொண்டு தவிக்க விட்ட பின்னணியில் வேறு ஏதேனும் நடந்திருக்கலாமா? என பேசிக் கொள்ளப்படுகிறது.

அடுத்த கட்ட ஆலோசனை தேர்தலில் போட்டியிட பண பலம் வேண்டும் என்ற வகையில் மாற்றுக் கட்சியில் இருந்து கடைசி நேரத்தில் இணைந்தவர்களுக்கு கூட பாரபட்சமே பார்க்காமல் விஜய் வாய்ப்பு வழங்கிய நிலையில், அந்த வியூகம் கடைசியில் விஜய்க்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. எடப்பாடி சட்டமன்ற தொகுதி மட்டுமல்லாமல், வேறு சில முக்கிய தொகுதிகளிலும் த.வெ.க.வினரின் கள செயல்பாட்டை குறைக்கும் வகையில் பல உள்ளடி வேலைகளை செய்ய சில பிரபலமான அரசியல் புள்ளிகள் முயன்று வருவதாக கூறப்படுவது, விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பார்த்து பார்த்து தேர்வு செய்த வேட்பாளர்கள், வேலையை காட்டுகிறார்களே? என கவலையில் ஆழ்ந்துள்ள விஜய் தரப்பு, வேட்பாளர்களை தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம்.
