முதல்-மந்திரி பதவி: டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவி விஷயத்தில் நான் பட்ஜெட்டுக்கு பிறகு புரட்சியில் ஈடுபட மாட்டேன். எனது போராட்டம் அதிகாரத்தை நோக்கியது அல்ல. நான் கட்சிக்காக போராடுகிறேன். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. நான் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்கிறேன். நான் பதவிக்காக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

நான் இதுவரை முதல்-மந்திரி பதவி குறித்து பேசவில்லை. முதல்-மந்திரி பதவி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுத்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன் என்று கூறினேன். அதை தவிர்த்து நான் வேறு எதையும் கூறில்லை. முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலகுவார் என்று நான் எங்கும் கூறவில்லை. முதல்-மந்திரி பதவி காலியாக இருந்தால்தானே வேறு ஒருவருக்கு வழங்க முடியும்.

காங்கிரஸ் கட்சிக்கு எக்காரணம் கொண்டும் பாதிப்பு ஏற்படக்கூடாது. கட்சி தலைவர் பதவியில் அமர்ந்து கொண்டு அதற்கு அநீதி ஏற்படுத்தக்கூடாது. நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். நாங்கள் கட்டி எழுப்பிய கட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. சுயநலத்துக்காக நான் அச்சுறுத்தும் அரசியல் செய்ய மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link