கடலூர்,
திமுக கூட்டணி கட்சியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து கடலூரில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் இருந்தனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசார மேடையில் பேசுகையில், பொதுமக்களை நான் சந்தித்து வரும் போது திமுகவின் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என்று சொன்னார். இந்த தேர்தல் அறிக்கைதான் வருகிற சட்டசபை தேர்தலில் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இதயக்கனியாக வெற்றிக்கனியாக நாளைய சரித்திரத்தை படைக்கப்போகிறது.
இந்த கூட்டணிக்கு நான் பொங்கல் விழாவை வைத்து ஒரு உதாரணம் சொல்கிறேன். பானையிலே அரிசி போட்டு, கையிலே சமையலாக்கி, முரசு கொட்டி, உதயசூரியனுக்கு பொங்கலை படைப்பது போல இந்த கூட்டணியின் வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.
கேப்டன் மற்றும் கலைஞரின் ஆசிர்வாதத்தோடும் மக்களின் ஆதரவோடும் எடப்பாடி பழனிசாமியின் ஆனவத்திற்கு கிடைக்கும் விலையாக இந்த கூட்டணி ஒரு மகத்தான வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
