மேற்காசிய மோதலால் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு; பிரதமர் மோடி மக்களவையில் பேச்சு

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மேற்காசிய மோதல் பற்றி தற்போது பேசி வருகிறார். அவர் பேசும்போது, மேற்காசியாவில் உள்ள சூழல் கவலையளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் ஏற்பட்ட சூழல் பற்றி இந்த அவையில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி விவரங்களை அளித்துள்ளனர்.

3 வாரங்களுக்கும் மேலாக, மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த மேற்காசிய மோதலால் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனாலேயே இந்த மோதலுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளின் அனைத்து தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் தொடுத்தன. இதனால் ஈரானில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால் மேற்காசிய பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், வான், கடல் வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. நாடுகளுக்கு இடையேயான மோதலால் மேற்காசிய பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

Source link