புதுடெல்லி
ஈரான் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.
இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதில், இந்தியர்களும் அடங்குவார்கள். அவர்கள் வெளிநாட்டு கொடியுடன் கூடிய கப்பல்களிலும் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில், வளைகுடா பகுதிக்கான கூடுதல் செயலாளர் அசீம் மகாஜன் இன்று கூறும்போது, மேற்காசிய மோதலில் சிக்கி 5 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். ஒருவரை காணவில்லை என கூறினார்.
ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தூதரகங்களுடன் நாம் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். காணாமல் போன இந்தியரை பற்றியும் மற்றும் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை சொந்த நாட்டுக்கு திருப்பி கொண்டு வரவும், தேவையான முறையான நடவடிக்கைகளை முடிப்பதற்காக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.
இந்த பகுதியிலுள்ள கப்பல் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. மத்திய வெளிவிவகார அமைச்சகமும் தொடர்ந்து, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது என அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று நேரடி விமான சேவை இல்லாத பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு விசா நீட்டிப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
