புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது.
இந்நிலையில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் இன்று அரசு சார்பாக சில விளக்கங்களை வெளியிட்டார். அவர் கூறும்போது, மார்ச் 8-ந்தேதி வரையிலான நாட்களில், மேற்காசிய மோதல்களுக்கு இடையே 67 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர் என்றார்.
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய நாட்டினரை வர்த்தக விமானங்கள் மற்றும் முன்பே பயணத்திற்கான திட்டமிடப்படாத விமானங்கள் உதவியுடனும் மீட்டோம். அதுவும் பகுதி நேர அளவுக்கே அந்த நாடுகளில் வான்வெளி திறந்திருக்கும்போது, அதனை பயன்படுத்தி இந்த மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.
இதேபோன்று, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்திய மாணவர்கள் மற்றும் பெரும் வணிகர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் அல்லது அர்மீனியா நாடு வழியே இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கும் உதவியது. பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த சூழலில், இந்திய நாட்டினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என்றார்.
ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் என்ற ஈரான் கப்பல் சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது அதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவை, ஈரான் நாடு தொடர்பு கொண்டது . இது ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா கப்பல் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது, கொச்சியில், ஈரானின் கப்பலை நிறுத்தி கொள்ள மனிதாபிமான அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த கப்பலின் 183 ஊழியர்களும் கொச்சி கடற்படை தளத்தில் தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளனர். மேற்காசியாவில் மோதல் மற்றும் பதற்றத்திற்கு இடையே, கொச்சியில் ஈரான் நாட்டின் ஐ.ஆர்.ஐ.எஸ். லாவன் கப்பலை நிறுத்த இந்தியா அனுமதி அளித்ததற்காக அந்நாட்டின் தலைமை இந்தியாவிடம் நன்றி தெரிவித்து கொண்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் இன்று கூறினார்.
