யுகாதி திருநாள்: அனைவரும் எல்லா வளமும், நலமும் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை,

யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் யுகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கை என்றாலே மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சரியம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேம்பு, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளிப் பானகம், உறைப்புக்கு மிளகாய், இனிப்புக்கு வெல்லம் ஆகியவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்தபின், அனைவருக்கும் பரிமாறி மகிழ்வர்.

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

யுகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும்; இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link