ஐதராபாத்
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இந்நிலையில், இவருடைய சகோதரர், பராகத் என்ற களைக்கொல்லியை தின்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி நடிகர் ராகுல் வெளியிட்ட செய்தியில், பராகத் என்ற அதிக நச்சு தன்மை கொண்ட ரசாயன களைக்கொல்லியை குறிப்பிட்டு உள்ளார். அது பரவலாக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் எளிதில் கிடைக்கிறது என்றும், அது நிலைமையை மோசமடைய செய்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை டேக் செய்து எக்ஸ் வலைதள பதிவை வெளியிட்டு உள்ளார். இது பரவலாக தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் தற்கொலைக்கு பலரும் இதனை பயன்படுத்துகின்றனர் என்றும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். விரைவில் இதனை தடை செய்து மக்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கையாகவும் கேட்டுள்ளார்.
இவர், ஆர்.ஆர்.ஆர். தவிர்த்து, பாரத் அனே நேனு மற்றும் ஜெயம்மு நிஸ்சயம்மு ரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, சாதிய விவகாரங்கள், சமூக பாரம்பரியங்கள் மற்றும் மோதல்கள் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய தண்டோரா படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் திரையரங்குகளில் படம் வெளியானது. ஆந்திரா கிங் தாலுகா படத்திலும் முக்கிய வேடத்தில் ராகுல் நடித்துள்ளார்.
