வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, வி.கே.சசிகலா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 -ஆம் ஆண்டு அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அதே ஆண்டு சிறை சென்றார். நான்கு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அனுபவித்த அவர் சிறையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பே அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதன் பின்பு எவ்வளவு முயற்சித்தாலும் சசிகலாவால் கட்சிக்குள் நுழையக் கூட முடியவில்லை.
உருவாகாமலே போன முக்குலத்தோர் அணி
இதற்கிடையில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் இணைந்து ஒரு தனி கூட்டணி உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் சசிகலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும், முக்குலத்தோர் வாக்குகள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அவர்கள் முக்குலத்தோர் அணி என்ற ஒன்று உருவாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அந்த கருத்துக்கள் வெறும் கானல் நீராகவே போனது.
அதன் பிறகு 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அனைவரும் அவரவர்களுக்கான, கூட்டணியை தேர்ந்தெடுத்தனர். இதில் தனித்து விடப்பட்டது ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மட்டும்தான். ஓ.பன்னீர் செல்வமும் தான் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அதிமுகவை விட்டு திமுகவில் இணைந்தார். இதற்கிடையில் சசிகலாவும் தனது ஆதரவாளர் உருவாக்கிய புதுக் கட்சியில் சேர்ந்தார். சசிகலா தரப்பில் தமிழக வெற்றிக்கழக தலைமையுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவையும் வெறும் வதந்திகளாகவே போய்விட்டது.
சசிகலா ராமதாசுடன் கூட்டணியா?
இந்த சூழலில்தான் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணியில் சேர சசிகலா விருப்பம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் பாமக வைத்திருக்கக் கூடிய வலுவான வாக்கு வங்கிகள் மூலம் அதிமுகவின் தலைமைக்கு நெருக்கடியை கொடுக்க முடியும் என நினைத்துதான் சசிகலா இப்படி ஒரு வியூகத்தை வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி தந்தை மகன் பூசலால் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. கட்சி ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் அன்புமணிக்கே சொந்தம் என சொல்லப்படுகிறது அதுமட்டுமின்றி பெரும்பான்மையான நிர்வாகிகள் அன்புமணி தரப்பிலே இருக்கின்றனர் இந்த சூழலில் ராமதாஸ் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கிடையில் தான் இன்று தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் சசிகலா நேரில் சென்று பார்த்ததாக சொல்லப்படுகிறது. அவரோடு செங்கோள் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையிலான கட்சிணரும் ராமதாசை சந்திக்க வருகை தந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே ஒருமுறை ராமதாசை சந்திக்க சசிகலா முயற்சித்ததாகவும் சசிகலா தரப்பு பலவீனமாக இருப்பதால் அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என ராமதாஸ் சொல்லி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்கள் தேர்தல் நடைபெற உள்ளது சசிகலா எந்த மாதிரியான கூட்டணியை அமைப்பார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
