மும்பை,
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையில் சிறந்த காலகட்டத்தை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டநிலையில், தற்போது சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா அரசு வழங்கும் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றான ‘கடார்’ (Gaddar) விருதுகளுக்கான 2025ஆம் ஆண்டின் விருது பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்படத் துறையில் சிறப்பாக சாதனை படைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், “தி கேர்ள் பிரண்ட்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது ராஷ்மிகா மந்தனாவுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக மகிழ்ச்சி தெரிவித்த ராஷ்மிகா, அந்த திரைப்படத்தில் தாம் நடித்த பூமா தேவி என்ற கதாபாத்திரம் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானது என கூறினார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ராகுல் ரவீந்திரன், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், நடிகர் நாக சைதன்யா “தண்டேல்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த திரைப்படம் தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் சிறந்த படம் என்ற விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கிய “சங்கராந்திக்கி வஸ்துன்னம்” திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
