மும்பை,
மராட்டிய மாநிலம் தானே நகரில் வியாபாரி வைரல் படேல் என்பவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வைரல் படேல் தனது இனிப்பு கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு நபர்கள் அவரைச் சந்தித்து தங்களை சமூக ஆர்வலர்கள் (RTI) என்று கூறிக்கொண்டனர்.
மேலும் வைரல் படேலின் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய வைத்து, அவற்றை நிரந்தரமாக மூட செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த படேல், உடனடியாகத் தானே குற்றப்பிரிவு காவல் நிலையதிற்கு சென்று தன்னிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த இருவர் மீதும் புகார் அளித்தார்.
அந்த புகாரைப் பெற்றக்கொண்ட போலீசார் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு விரிவான விசாரணையைத் தொடங்கினர். இதன்படி அந்த இரு நபர்களை கையும் களவுமாகப் பிடிக்க வசந்த் விஹார் பகுதியில் ரூ.2 லட்சம் பணத்தை படேலிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை வைரல் படேலிடம் இருந்து அக்ஷய் ஜெயந்த் கரஞ்சவ்கர் மற்றும் சுஷாந்த் சஞ்சய் ஆகிய இருவரும் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட கரஞ்சவ்கர் ஏற்கனவே, தானே மாநகராட்சியில் நடந்த ஒரு லஞ்ச ஊழல் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
