தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரொக்கமாக எடுத்து செல்வதில் சில தளர்வுகளை அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இது பொதுமக்களுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரொக்கப் பணம் பறிமுதல் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை
குறிப்பாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வேண்டும் என்று விதிமுறைகள் பயன்பாட்டில் உள்ளன. இதனால் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வியாபார ரீதியாக செல்பவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள், மருத்துவ காரணங்களுக்காக பயணிப்பவர்கள் அதிக அளவில் பணம் எடுத்து செல்ல வேண்டி வரும். இவர்களை தடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பரிசோதிக்கும் போது, சிக்கி கொள்ள நேரிடுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பு! _ மாறப்போகும் அரசியல் களம்! _ 4மணிக்கு வெளியாகும் தேர்தல் தேதி!
ரூ.50,000 வரம்பு அதிகரிக்க கோரிக்கை
ஏனெனில் ஆவணங்கள் விஷயத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சற்றுமுன் அளித்த பேட்டியில், பல்வேறு அமைப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு வந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய் என்பது மிகவும் குறைவாக உள்ளது. இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக வேண்டுகோள் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்கள் – வாட்ஸ்-அப் ஆவணங்கள் போதும்
இதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். தற்போதைய விதிமுறைகளின் படி அதிகபட்ச வரம்பு என்பது 50,000 ரூபாயாக இருக்கிறது. மருத்துவ காரணங்களுக்காக 50,000 ரூபாய்க்கும் மேல் ரொக்கப் பணம் எடுத்து செல்பவர்கள், வாட்ஸ்-அப்பில் ஆவணங்களை காண்பித்தால் போதும் என்று தளர்வை அறிவித்திருக்கிறார். இது பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறைதீர் குழுக்கள் மூலம் பணம் திரும்ப பெறலாம்
பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த பின்னர், எங்கு சென்று வாங்குவது என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், மாவட்ட வாரியாக குறைதீர் குழுக்கள் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை ஆவணங்கள் இல்லையெனில் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விடுவோம் என்று பதிலளித்தார்.
ஆவணங்களை பொறுத்தவரை பணம் எப்படி வந்தது என்ற விவரங்கள் இருக்க வேண்டும். சில ஊரகப் பகுதிகளில் தான், இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளன. ஏதாவது சந்தையில் இருந்து வரும் போது ஆவணங்கள் இல்லை என்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் வாட்ஸ்-அப் மூலம் ஆவணங்களை, போதிய விவரங்களை காண்பிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அர்ச்சனா பட்நாயக் கேட்டுக் கொண்டார்.
