புதுடெல்லி
நாட்டில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதிய அளவிலான குடிநீர் வழங்குவதற்காக 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால், ஜலஜீவன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ.8.7 லட்சம் கோடி மதிப்பில் 2028-ம் ஆண்டு டிசம்பர் வரையில், இத்திட்ட விரிவாக்கம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, உள்கட்டமைப்பு உருவாக்கம் முதல் குடிநீர் வினியோகம் வரையிலான ஜலஜீவன் திட்ட மறுகட்டமைப்பு மற்றும் அதனை அமல்படுத்துவதற்கான மத்திய ஜலசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
இதனுடன், நீடித்த கிராமப்புற குழாய் தண்ணீர் வினியோகத்திற்கான சுற்றுச்சூழலியல் அமைப்புக்கும், குடிநீர் நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இந்த ஜலஜீவன் திட்ட மறுகட்டமைப்புக்காக, கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தப்படும். இதனை முன்னிட்டு, மொத்தம் ரூ.8.69 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், மத்திய அரசின் நிதியுதவி மொத்தம் ரூ.3.59 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த 2019-20-ம் ஆண்டில் மத்திய அரசின் நிதியுதவி மொத்தம் ரூ.2.08 லட்சம் கோடியாக இருந்தது. அதனை விட தற்போது 1.5 லட்சம் கோடிக்கும் கூடுதலாக அரசு நிதியொதுக்கி உள்ளது. இதன்படி தேசிய அளவில் சீரான, சுஜலாம் பாரத் என்ற டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படும்.
அதன் கீழ் ஒவ்வொரு கிராமமும் அந்தந்த சேவை பகுதிக்கான தனித்த அடையாள எண் ஒதுக்கப்பெறும். இதனால், ஓரிடத்தில் இருந்து குழாய்க்கு குடிநீர் விநியோக திட்டம் ஆனது முழுமையாக டிஜிட்டல் வடிவில் தகவல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்.
