லாடெர்டேலா,
லயோனல் மெஸ்சி உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருக்கும் அவர், அடுத்த உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறார். இதேவேளை, அமெரிக்காவில் உள்ள இன்டர்மியாமி கிளப்புக்காகவும் விளையாடி வருகிறார்.
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கிளப் அணிகளுக்கான கோன்காகாப் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் நடந்த இன்டர்மி யாமி- நாஷ்வில்லே இடையிலான கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் இன்டர்மியாமி அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 7-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான முந்தைய ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதால் இரு ஆட்டங்கள் முடிவில் 1-1 என சமநிலை நீடித்தது. இதையடுத்து வெளியூரில் கோல் அடித்ததன் அடிப்படையில் நாஷ்வில்லே அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடித்தது. இன்டர்மியாமி வெளியேறியது.
போட்டியின் முடிவு மெஸ்சிக்கு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் அவர் வரலாற்று சாதனையை பதிவு செய்தார். போட்டியின் 7-வது நிமிடத்தில் அடித்த கோல், அவரது கெரியரில் 900-வது கோலாக அமைந்தது. இதன் மூலம் சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளை சேர்த்து 900 கோல்கள் அடித்த இரண்டாவது வீரராக மெஸ்சி திகழ்கிறார். இந்த சாதனையை முன்பே கிறிஸ்டியானோ ரொனால்டோ எட்டியிருந்தார். 38 வயதான மெஸ்சி, 2012-ல் ஒரே ஆண்டில் 91 கோல்கள் அடித்த சாதனையும் அவரிடம் உள்ளது.
