ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சோச்ரா காலாவில் உள்ள பனாரா கிராமத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி இரு பயங்கரவாத அமைப்புகள் மோதிக்கொண்ட தாக்குதலில் கிராமப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து மே 1ம் தேதி முதல் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குல்காமின் ரெட்வானி பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து பயங்கரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டு பாதுகாப்புப் படையினர் என்கவுன்டர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் லஷ்கர் ஆதரவு பயங்கரவாத அமைப்பான Resistance Front (TRF)ன் தலைவர் பாசித் தார் உட்பட பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர், பொதுமக்களைக் கொன்றது உள்ளிட்ட 18 வழக்குகள் பாசித் தார் மீது பதிவுசெய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைப்பினரால் ரூ.10 லட்சம் பாசில் தார் தலைக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

