டெல் அவிவ்
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது. இதனால், லெபனான் நாட்டையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பும் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று வெளியிட்ட செய்தியில், லெபனானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வாலித் முகமது திப். லெபனானில் செயல்பட்டு வரும் நிதிசார்ந்த நெட்வொர்க்கில் ஒரு மூத்த அதிகாரியாக திப் இருந்து வந்துள்ளார். பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு வேண்டிய நிதியை பரிமாற்றம் செய்வதில் முக்கிய பங்காற்றி வந்தவர்.
இதன்படி, ஜூடியா மற்றும் சமரியா பகுதிகளுக்கு பணப்பட்டுவாடா செய்து, ஹமாஸ் அமைப்புக்கான மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வந்துள்ளார். லெபனான் தவிர்த்து, பிற நாடுகளுக்கும் நிதியுதவி செய்து வந்ததுடன், சிரியா மற்றும் லெபனானில் இருந்து பயங்கரவாத செயல்களுக்கு ஆள்தேர்வு செய்தும் வந்துள்ளார் என அதுபற்றிய செய்தி தெரிவிக்கின்றது.
கடந்த 2-ந்தேதியில் இருந்து லெபனானில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,021 பேர் பலியாகி உள்ளனர். 2,641 பேர் காயமடைந்து உள்ளனர். 1.34 லட்சம் பேர் புகலிடம் தேடி சென்று நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
