பெய்ரூட்
ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்த அமைப்பு லெபனானில் இருந்து செயல்படுகிறது.
இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கி வருகிறது. ஆனால், லெபனானோ போரை தடுக்க விரும்புகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே அதன் மைய பகுதியாக அமைந்த பாஷவுரா என்ற இடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் கட்டிடம் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில், பொதுமக்களில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தவிர, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
இஸ்ரேல் பீரங்கிகளில் ஒன்று தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. நிலையின் மீது இந்த மாதத்தில் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனை இஸ்ரேல் ராணுவம் ஒப்பு கொண்டுள்ளது. இதில் கானா நாட்டின் அமைதிகாப்பாளர்கள் 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த சூழலில், லெபனானின் கலாசார துறை மந்திரி கஸ்ஸன் சலாமி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை பற்றி குறிப்பிட்டார்.
அப்போது அவர், தெற்கு லெபனானின் புதிய பகுதிகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் வீட்டுக்கு செல்ல முடியாத வகையில், அவர்களை தடுத்து, கட்டிடங்களை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறது. மக்களை புலம்பெயர செய்கிறது. மெல்ல அந்த பகுதியை ஆக்கிரமிக்கிறது.
இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டு அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால் பல காரணங்களால் அது தடைபட்டு உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவிக்கின்றது. சில நாடுகள் லெபனானின் தொடக்க நடவடிக்கைக்கு உதவி வருகிறது. அதில் பிரான்ஸ் நாடு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்பு கொண்டுள்ளது என கூறினார்.
